கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்டோர் ஆதரவு

மும்பை
விஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவருடைய நீண்ட கால நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு பல்வேறு நடிகர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஷாருக்கான்
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்:– இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் சந்தித்தோம். சுருக்கமாக கூறினால் ஒரு படத்துக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்து விட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம்.கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நாகார்ஜுன்

நடிகர் நாகார்ஜுன்: கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை.நடிகர் சித்தார்த்: மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்.நடிகர் ரஜத் கபூர்: விஸ்வரூபம் படம் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வெளியாகி உள்ள நிலையில், அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு எப்படி பங்கம் வந்து விட்டது? தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அது நாடு முழுமைக்கும் பொருந்தாதா அல்லது நம்மிடம் பல நாடுகள் இருக்கிறதா?

ஜெயப்பிரதா

நடிகை ஜெயப்பிரதா: விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே ‘மெசேஜ்’ இருக்கும்.பட அதிபர் மகேஷ்பட்: கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்.தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன்: தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்.நடிகர் மனோஜ் பாஜ்பாய்: ஒரு படத்தை சுமுகமாக திரையிடுவதற்கு தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் உறுதி அளிக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு அத்தகைய சான்றிதழ் கிடைத்த பிறகும் தமிழ்நாட்டில் அச்சத்தை தரும் சூழ்நிலை காணப்படுகிறது.இவ்வாறு நடிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது